Saturday, May 05, 2012

IPL5 CSK vs KKR -சேப்பாக்கத்தில் சொதப்பிய சென்னை

IPL5 CSK vs KKR -சேப்பாக்கத்தில் சொதப்பிய சென்னை


கடந்த ஒரு 4-5 IPL ஆட்டங்களை ஏனோ பார்க்கவில்லை! இம்முறை Mr.Cricket மைக்கேல் ஹஸ்ஸி சென்னை அணியில் இருந்ததால், இந்த ஆட்டத்தில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் டிவி முன் உட்கார்ந்தேன். (என் நல்ல காலம், டிக்கெட் இருந்தும், சேப்பாக்கத்துக்கு செல்லவில்லை!) ஆட்டத்தில் ஜெயிக்கிறாரோ இல்லையோ, டாஸில் தோனி ஜெயித்து விடுகிறார்! சென்னை முதல் பேட்டிங் செய்தது.

டுபிளஸ்ஸி 2வது ஓவரிலேயே லீ பந்து வீச்சில் காலி. 5வது ஓவரில் ஹஸ்ஸி தன்னைத் தானே ரன் அவுட் ஆக்கிக் கொண்டார்! ரைனா நன்றாக ஆடிக்கொண்டிருந்தது சற்று ஆறுதல். 10 ஓவர்களில் 74-2, ஆடுகளத்தின் தன்மையை (பந்து பிட்ச் ஆனவுடன், பந்தின் வேகம் கணிசமாக குறைந்து விடுவதை) வைத்து பார்க்கும்போது, இதை நல்ல நிலைமை என்று தான் கொள்ள வேண்டும்! 155-160 ரன்கள் எடுத்து விட்டால், கொல்கத்தாவுக்கு ஆப்பு உறுதி என்றும் தோன்றியது!


பிரேவோவும் ரைனாவும் சீக்கிரமே விக்கெட் இழந்தார்கள். தோனியும், மில்லியன் டாலர் பேபி ஜடேஜாவும் சோபிக்கவில்லை. நரைனின் அருமையான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பயங்கரமாகத் தடவினார்கள். 17 ஓவர்களில் 113/4. 140 கூட தேறாது என்று புரிந்தது. பிரேவோ, அஷ்வின் தவிர்த்து நம்மிடம் இருக்கும் பந்து வீச்சை வைத்துக் கொண்டு 140-ஐ defend பண்ணுவது கடினம் என்றும் புரிந்தது. சென்னையின் மரண வேதனையின் முடிவில் மொத்த ஸ்கோர் 139!

இம்மாதிரி ஆடுகளத்தில் திறமையும், நிதானமும் உள்ள மட்டையாளர்கள் மட்டுமே பரிமளிப்பார்கள் என்பதற்கு கம்பீரும், காலிஸும் சிறந்த உதாரணங்கள். மெக்கல்லம் 3வது ஓவரிலேயே அவுட்டான பின், இருவரும் ஜோடி சேர்ந்ததில், 12 ஓவர்களில் 82-1. காலிஸ் அவுட்டான பிறகும், கம்பீர் RRR 8-க்கு மேல் போகாமல் பார்த்துக் கொண்டார். திவாரியும், கம்பீரும், பதானும், 18, 19 மற்றும் 20வது ஓவர்களில் விக்கெட்டிழந்து, Climax-இல் சற்றே சுவாரசியம் கூடியபோதும், சென்னைக்கு Anit-climax ஆக ஆட்டம் முடிந்தது. சேப்பாக்கம் என்ற CSK-யின் கோட்டை மதிள்சுவரில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்திருப்பதால், சென்னை ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது அவர்கள் உடம்புக்கு நல்லது :-)

இத்தனை "பெத்த" பேரு மட்டையாளர்களை வைத்துக் கொண்டு (டுபிளஸ்ஸி, ஹஸ்ஸி, தோனி, ரைனா, ஜடேஜா, பிரேவோ, மார்க்கல், பத்ரி) 139 ரன்கள் எடுத்த ஒரு லாயக்கில்லாத அணி தோற்றது நியாயம் என்று தான் நினைக்கிறேன்! அதோடு, மார்க்கல் போன்ற பலம் வாய்ந்த hitter-களுக்கு ஒவ்வொரு ஆட்டத்திலும், கடைசியில் 8-10 பந்துகள் ஆடக் கிடைத்தால், அவர் தான் என்ன செய்ய முடியும்?
இந்த IPLலில் (மொத்தம் 8 ஆட்டங்களில், மும்பைக்கு எதிரான ஆட்டம் தவிர்த்து) அவருக்கு ஆடக் கிடைத்த வாய்ப்பு 7-8 ஓவர்கள் தான். இதில் என்னத்தை கிழிக்க முடியும்! அது போலவே, ரைனா கடந்த இரு IPL-கள் போல இந்த IPL-லில் பிரகாசிக்காதது சென்னையின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம்.

தோனியும், பயிற்சியாளர் ஃபிளெமிங்கும், பிற பயிற்சியாளர்களும், திறமையான வீரர்கள் கொண்ட காம்பினேஷன் இருந்தும் சென்னையின் தொடர் தோல்விகளுக்கான காரணங்களை அலசி, புது திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அது போலவே, என்னைப்போன்ற சென்னை ரசிகர்கள், கேல்குலேடரை கையில் வைத்துக் கொண்டும், Spreadsheet அனாலிஸிஸ் செய்தும், எத்தனை ரன் வித்தியாசத்தில், எவன் ஜெயித்து எவன் தோற்பதால், எந்த ஆட்டத்தில் மழை பெய்வதால், சென்னை அணி (எப்படியாவது) அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யத் தயாராக வேண்டும் ;-)

சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) தங்கள் பெயரை "சென்னை சப்பைக் கம்மனாட்டிகள்" என்று மாற்றிக் கொள்ளலாம்! இந்த இடுகையில், யாரையும் திட்டக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், "முடியல", மன்னிக்கவும்!

எ.அ.பாலா

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails